ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Monday, October 22, 2012

ஜகாத்



விமர்சனம்: 1986லிருந்து இதுநாள்வரை மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான். மனித அபிப்பிராயத்திற்கு மார்க்கத்தில் அணுவளவும் இடமே இல்லை என்று சொல்லி வந்த நீங்கள், இப்போது ஜகாத் விஷயத்தில் உமர்(ரழி) அலீ(ரழி) போன்றோரின் சொந்தக் கருத்துக்களை ஆதாரமாக வைத்து, ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் வருடா  வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறி வருவது, உங்களின் முன்னைய கூற்றுக்கு முரண்படுவதாகப் பரவலாகச் செய்தி பரப்பப்பட்டு வருகிறதே? இதுபற்றிய உங்களின் பதில் என்ன?                    A. கமால், திருச்சி.

விளக்கம்: மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான். நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு மார்க்கத்தில் ஓர் அணுவளவும் கூட்டவோ குறைக்கவோ மனிதர்களில் யாருக்கும் அதிகாரமில்லை என்று கூறும் 7:3, 33:36,66,67,68 இறைக்கட்டளைகளில் எமக்குத் துளியும் சந்தேகமில்லை. மேலும் 9:34 இறைக்கட்டளைப்படி சேமித்து வைக்கும் பொருளுக்கு வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் ஜகாத் கொடுப்பது நபி(ஸல்) அவர்களின் நடைமுறையில் இருந்ததையே உமர்(ரழி), அலீ(ரழி) போன்றோர் எடுத்துக் கூறுகிறார்கள் என்பதில் சுயநலமற்ற, உலகத்தை மறுமையைவிட அதிகமாக நேசிக்காத, நடுநிலையாளர்கள் உணர்ந்தே செயல்படுத்தி வருகிறார்கள.


ஜகாத் ஹிஜ்ரி 2-ல் கடமையாக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மரணம் ஹிஜ்ரி 11; சுமார் பத்து(10) வருடங்கள் நபி(ஸல்) அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் வசூலித்ததை தங்கள் கண்களால் அதுவும் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, சுமார் 10 ஆண்டுகள் நேரடியாகப் பார்த்து அறிந்தவர்கள் நான்கு கலீஃபாக்களும், நபிதோழர்களும் ஆவார்கள். அந்த நடைமுறையே இதுகாலம் வரை எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நபி(ஸல்) அவர்களின் சொல்லும், செயலும் இரவும் பகலைப்போல் தெள்ளத்தெளிவானது. எந்தப் புரோகிதனினதும் சுயநலத்துடன் கூடிய மேலதிக விளக்கம் தேவையே இல்லை!

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்பது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்க அனுப்பியவர்களிடம், தெளிவாக நேரடியாக, இதுவரை ஜகாத் வசூலிக்காத பொருள்களில் மட்டும் ஜகாத் வசூலித்து வாருங்கள் என்று கட்டளையிட்டே அனுப்பி இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்க அனுப்பிய காலகட்டங்களை நேரில் கண்ணால் பார்த்தவர்கள் நபித்தோழர்கள். இந்த அடிப்படைகளில் நபி(ஸல்) அவர்கள், ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் ஜகாத் வசூலித்ததையும், அதுவும் வருடாவருடம் வசூலித்ததையும் 10 வருட காலகட்டத்தில் நேரடியாகத் தங்கள் கண்களால் கண்டதை வைத்தே ஜகாத் வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுப்பது கடமை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இவை நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு முரணானவை அல்ல. அதற்கு மாறாக இவை நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இல்லை என்று நிலைநாட்ட விரும்புகிறவர்கள், இதற்கு முரணான, அதாவது ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்கவேண்டியதில்லை; பொருள் கிடைத்தவுடன் ஜகாத் கொடுக்க வேண்டும், ஒரு வருடம் நிறைவு பெற்ற பின்னர்தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை என்பதற்கு நேரடியான, ஆதாரபூர்வமான ஹதீஸை எடுத்து வைத்து தங்களின் புதிய வாதத்தை நிறுவ வேண்டும். இப்படித்தான் விளங்கமுடியும், விளங்கவேண்டும் என்ற இவர்களின் யூகங்கள் மார்க்கமாகாது. குப்பைத் தொட்டியில் எறிய வேண்டியவை.

குர்ஆன் வசனங்களை ஒன்று சேர்ப்பதில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து, ஆலோசனை செய்யப்பட்டு அதன் பின்னர் முடிவெடுத்து ஒன்று சேர்த்ததாகப் பல அறிவிப்புகள் காணப்படுகின்றனவே, அதுபோல் ஜகாத் வருடாவருடம் கொடுக்க வேண்டும், கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற விவகாரத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டு முடிவெடுத்ததாக ஒரு அறிவிப்புக் கூட இல்லையே! இதுவே ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது ஆதாரமற்றது என நிரூபிக்கிறது என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் அவர்களின் வாதம் அறிவீனமானது, மிகத் தவறானது என்பதையே நிலை நாட்டிக் கொண்டிருக்கிறது.

நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு அனைத்து குர்ஆன் வசனங்களும், தோலிலும், எலும்புத்துண்டுகளிலும், அன்றிருந்த எழுத வசதிப்பட்ட பொருள்களிலும் எழுதப்பட்டு அவை பலரிடம் இருந்து வந்தன. நபி(ஸல்) அவர்களது காலத்தில் அவற்றை ஒன்று திரட்டி ஒரே நூல் வடிவில் ஆக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணமும் உண்டு. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வஹீ முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. எனவே ஒரே நூலாகக் கோர்ப்பது சாத்தியமற்ற நிலையில் இருந்தது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் மரணத்தோடு 'வஹி' முற்றுப்பெற்றுவிட்டது. மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது. மேலதிகமாக குர்ஆனில் சேர்ப்பதற்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. எனவே அந்த நிலையில்தான் அல்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே நூலாக ஆக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இது நபி(ஸல்) அவர்களது காலத்தில் நடைபெறாத ஒரு காரியம்தான்.

எனவேதான் அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடுமையான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, இது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தும் ஒரு 'பித்அத்' அல்ல, நபி(ஸல்) அவர்களுக்கு வஹி மூலம் இறக்கி அருளப்பட்ட குர்ஆன் வசனங்கள் அனைத்தும், சில சில வசனங்களாக பிரிந்து பலரிடம் இருப்பதை ஒன்று சேர்த்து ஒரே நூலாக ஆக்குவதுதான் நமது பணி. அதுவும் இது மிகமிக அத்தியாவசியமானது. அப்படிச் செய்தால்தான் பின்னர் இடைச்செருகலுக்கு இடம் இல்லாமல், அல்குர்ஆன் அது இறக்கப்பட்ட அதன் தூய வடிவில் பாதுகாக்கப்படும். இல்லை என்றால் தவ்றாத்திலும், இன்ஜீலிலும், ஜபூரிலும் இந்தப் புரோகித வர்க்கத்தினரால் கலப்படம் செய்யப்பட்டு அவற்றின் புனித நிலை மாசுபடுத்தப்பட்டது போல், அல்குர்ஆனும் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகிதர்களின் கரம்பட்டு மாசு பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொண்டு, இது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தும் பித்அத்தான ஒரு செயல் இல்லை என்பதை திட்டமாகத் தெரிந்து கொண்டு, குர்ஆனை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

இங்குதான் நாம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட அனைத்து குர்ஆன் வசனங்களும் சில பல வசனங்களாக சிலரிடம் இருந்ததை ஒன்று சேர்த்து ஒரே நூலாக ஆக்கும், மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தும் 'பித்அத்' அல்லாத ஒரு செயலையே செய்வதற்கு அஞ்சி, பலமுறை மீண்டும் மீண்டும் ஆலோசனைகள் செய்து, அது 'பித்அத்' அல்ல என்ற முடிவுக்கு ஏகோபித்து வந்த கலீஃபாவும், நபிதோழர்களும், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஜகாத்தை எப்படி வசூலிப்பது? எந்த கால கட்டத்தில் வசூலிப்பது? என்பது நபி(ஸல்) அவர்களது காலத்தில் இல்லாதிருந்து, நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு கலீஃபாவும், நபிதோழர்களும் அதை முடிவு செய்வதாக இருந்தால், அதுவும் இன்று புதிதாக மார்க்கச் சட்டம் சொல்லும் நவீன முஜ்தஹித்(?) P.J. சொல்வதுபோல் பித்அத்தான வருடாவருடம் ஜகாத் வசூலிப்பதை, கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் வசூலிப்பதை, எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் செய்திருக்க முடியுமா? இது அறிவுக்குப் பொருந்தி வருகிறதா?

அதுவும் பித்அத்தே அல்லாத பிரிந்துகிடந்த குர்ஆன் வசனங்களை ஒரே நூலாக ஆக்குவதிலேயே 'பித்அத்' ஆகிவிடுமோ என அஞ்சி, பயந்து பலமுறை மடக்கி மடக்கி ஆலோசனை செய்து, அது 'பித்அத்' அல்ல என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து அதைச் செய்தவர்கள், உண்மையிலேயே பித்அத் ஆகிவிடும் இந்த ஜகாத் விஷயத்தில் அஞ்சாமல், பயப்படாமல், கருத்து வேறுபாடு கொள்ளாமல், கலந்தாலோசனைகள் செய்யாமல் தான்தோன்றித்தனமாக நடைமுறைப்படுத்திவிட்டார்கள் என்று சொல்ல வருகிறாரா இந்த நவீன இமாம்(?) (நவூதுபில்லாஹ்) இப்படிக் கனவில் கூட ஓர் உண்மை விசுவாசி நினைத்துப் பார்க்கமாட்டான்.

நபி(ஸல்) அவர்களின் தெள்ளத்தெளிவான நடைமுறையை பத்து(10) வருட காலமாக தங்கள் அனுபவத்தில், தங்கள் கண்களால் கண்டபடி, அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் கலீஃபாக்களும், நபிதோழர்களும் ஜகாத் வருடாவருடம் கொடுக்க வேண்டும், கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்றே நேர்வழி நடப்பவர்கள் விளங்க முடியும். கோணல் வழிகளில் நடப்பவர்களுக்கே இது விஷயத்தில் கோணல்புத்தி ஏற்பட்டு, தன்னை நம்பியுள்ளவர்களை வழிகெடுக்கும் சிந்தனை ஏற்படும்.

எனவே 9:34 இறைக்கட்டளைப்படி செல்வங்களை தங்களுக்காகவும், தங்களின் வாரிசுகளுக்காகவும் சேமித்து வைப்பவர்கள், அந்த செல்வங்களுக்காக வருடாவருடம், கொடுத்த செல்வத்திற்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அப்படிக் கொடுக்கத் தவறினால் 9:35 அல்குர்ஆன் வசனம் கூறுவதுபோல் அவை பழுக்கக் காய்ச்சப்பட்டு அவர்களின் நெற்றிகளிலும், முதுகுகளிலும், விலாக்களிலும் சூடு போடப்பட்டு அதன் வேதனையை மீண்டும் மீண்டும் அனுபவிக்கச் செய்யப்படுவார்கள் என்பதை மனதில் இருத்திக் கொள்ளட்டும்.

நான்கு கலீஃபாக்களிலிருந்து, அனைத்து நபிதோழர்களும் ஒட்டுமொத்தமாக நபி(ஸல்) அவர்களின் நடைமுறையைப் புறக்கணித்து விட்டு, முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டுவிட்டு, புதிதாக ஒரு நடைமுறையை அதாவது பித்அத்தை மார்க்கத்தில் புகுத்தினார்கள் என்ற எண்ணத்தைவிட ஒரு கேடுகெட்ட எண்ணம், ஷைத்தானியத்தான எண்ணம் ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனுக்கு ஒரு போதும் ஏற்படாது. அழிந்து நாசமாகி நரகில் சென்று விழும் வழிகேடர்களுக்கே ஒட்டுமொத்த நபிதோழர்கள், கலீஃபாக்கள் நபியின் நடைமுறைக்கு மாறாக நடந்துள்ளார்கள் என்ற தீய எண்ணம் ஏற்பட  முடியும்.

எனவே சேமிக்கும் செல்வத்திற்கு ஒரு வருடம் பூர்த்தியான பின்னரே ஜகாத் கடமையாகும்; வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுத்து வர வேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் நடைமுறையே அல்லாமல் உமர்(ரழி) அவர்களின் சுய கருத்தோ, அலீ(ரழி) அவர்களின் சுய கருத்தோ இல்லை என்பதே தெள்ளத் தெளிவான சந்தேகமற்ற முடிவாகும்.

புதிதாக மார்க்கச் சட்டம் இயற்றும் நவீன முஜ்தஹித்(?) இமாம்(?) இன்று புதிதாகக் கூறுவது போல் அவை உமர்(ரழி) அலீ(ரழி) இவர்களின் சுய கருத்து என்றே ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டு பரிசீலித்துப்பாருங்கள். அப்போதும் இந்த நவீன இமாமும், அவரை கண்மூடிப் பின்பற்றுகிறவர்களுமே வழிகேடர்கள் என்பது உறுதியாகும். அந்த விபரங்களையும் பார்ப்போம்.

அல்குர்ஆனில் ஜகாத் கொடு என்றுதான் இருக்கிறது. காலம் குறிப்பிடவில்லை. ஹதீஸிலும் இல்லை என்ற P.J.யின் தவறான வாதத்தை வைத்தே சிந்திப்போம். ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் கொடு என்றால் அது ஒரு முறை கொடுப்பதுதான் என்றே விளங்க வேண்டும் என்பது அவரின் புதிய வாதம். வருடா வருடம் கொடுப்பது என்று விளங்குவதாக இருந்தால் மாதா மாதம் கொடுப்பது, வாராவாராம் கொடுப்பது, தினசரி கொடுப்பது என்று பொருள் கொள்ள அதில் இடம் இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது என்பது P.J.யின் வாதம். இதிலிருந்தே ஒருமுறை உடனடியாகவோ, ஒரு வருட அவகாசத்திலோ ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுப்பதோடு கடமை முடிந்து விட்டது என்பது திட்டமான உறுதியான சொல் இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டு விட்டார். இது அவரது சொந்தக் கருத்து என்பது திட்டமாக வெளிச்சத்திற்கு வந்து விட்டது.

இப்போது நாம் சிந்திப்போம். ஒரு பொருளுக்கு ஒரு வருடம் பூர்த்தியான பின்னரே ஜகாத் கடமையாகும். வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கவேண்டும் என்பது நேர்வழி நடந்த கலீஃபாக்களான உமர்(ரழி) அலீ(ரழி) இருவரின் சொந்தக் கருத்து. (இது P.J.யின் கூற்று; வாதத்திற்காக ஏற்றிருக்கிறோம்) அதற்கு மாறாக ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் கடமை நிறைவேறிவிட்டது. மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை. அதை உடனடியாகவும் கொடுக்கலாம். ஒரு வருட அவகாசத்திலும் கொடுக்கலாம். இது P.J.யின் சொந்தக் கருத்து.

இப்போது நாம் அலசுவோம். P.J.யின் கருத்துப்படி குர்ஆன், ஹதீஸில் நேரடி ஆதாரமில்லை. இப்படித்தான் விளங்க முடியும் எனும்போது, நம் முன்னால் இருப்பது குர்ஆன், ஹதீஸ் அல்லாத மூன்றாவது கருத்தாக உமர்(ரழி) அலீ(ரழி) இருவரின் சொந்தக் கருத்து அதற்கு மாறாக நவீன இமாம் P.J.யின் சொந்தக் கருத்து; இப்போது P.J.யின் வாதப்படி நம் முன்னால் இருக்கும் குர்ஆன் ஹதீஸில் இல்லாத நிலையில் உமர்(ரழி) அலீ(ரழி) இருவரின் சொந்தக் கருத்தான மூன்றாவது கருத்தை ஏற்பதா? அல்லது P.J.யின் சொந்தக் கருத்தான மூன்றாவது கருத்தை ஏற்பதா? குறைந்த மதிபடைத்த முஸ்லிமும் இங்கு P.J.யின் சுய கருத்தை நிராகரித்துவிட்டு, இரண்டு நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுய கருத்தைத்தான் ஏற்க வேண்டும் என்று சிறிதும் சலனமின்றி கூறி விடுவார்கள்.

உமர்(ரழி), அலீ(ரழி) ஆகிய இருவரும் நபி(ஸல்) அவர்களோடு நீண்ட காலம் நெருங்கிப் பழகியவர்கள். நபி(ஸல்) அவர்களின் செயல்பாடுகளை, நடைமுறைகளை நேரடியாக கண்டு உறுதிப்படுத்திக் கொண்டவர்கள். இது அல்லாமல் அந்த இருவருக்கும் தனிப்பட்ட பல சிறப்புகள் உண்டு. சுவர்க்கத்து நன்மாராயம் பெற்றவர்கள்; பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்கள். அவர்களின் பாவங்களில் சில நன்மையாக மாற்றிக்கொடுக்கப்பட்டவர்கள். உமர்(ரழி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி(ஸல்) அவர்களால் புகழ்ந்து கூறப்பட்டவர்கள். அவர்களது விருப்பப்படியே சில குர்ஆன் வசனங்கள் இறங்கின. நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி இல்லை. அப்படி நபி வருவதாக இருந்தால் அதற்குரிய தகுதியைப் பெற்றவர் உமர்(ரழி) என்பது நபிவாக்கு.

அலீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்த மறுமகன். சின்னஞ்சிறுவராக இருக்கும்போதே இஸ்லாத்தை தழுவி நபி(ஸல்) அவர்கள் கூடவே இருந்து அவர்களின் சகல செயல்பாடுகளையும் மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தவர். பல சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டவர். நேர்வழி நடந்த சிறப்புக்குரிய நான்காவது கலீஃபா. அந்த இருவரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பொய் பேசாதவர்கள். மற்றவர்கள்மீது அநியாயமாக அவதூறு கூறாதவர்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்களால் மிகச் சிறந்த தலைமுறை என்று கூறிய சிறந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அந்த இரண்டு நேர்வழி நடந்த கலீஃபாக்களின் முன்னால் நவீன இமாம்(?) P.J.ஒன்றுமே இல்லை. அவர்களின் கால்தூசு பெறமாட்டார் இந்த P.J. அதுவும் இந்த P.J. நல்லவராக, பொய் சத்தியம் செய்யாதவராக, மற்றவர்கள்மீது அநியாயமாக அவதூறு கூறாதவராக இருந்தால்தான் இந்த நிலை.

ஆனால் P.J. பற்றி சிறிது சுயசிந்தனை உடையவனும் அறிந்து கொண்டுள்ள உண்மைகள். அவர் துணிந்து பொய் பேசக் கூடியவர். பொய் சத்தியம் செய்பவர்; சிறிதும் தயக்கமின்றி அல்லாஹ்மீது ஆணையிட்டே பொய் சத்தியம் செய்பவர்; மற்றவர்கள்மீது அபாண்டமாக அவதூறுகளை அள்ளி இறைப்பவர்; குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக தனது பொய்வாதங்களை நிலைநாட்ட முபாஹலாவுக்கு துணிந்து அழைப்பவர். தன்னுடைய சாபத்தின் காரணமாக தன்னுடைய மனைவி மக்களையும் “ஒருவருடைய சுமையை இன்னொருவர் சுமக்கமாட்டார்” என்ற அல்குர்ஆனின் கட்டளைக்கு மாறாக சம்பந்தப்படுத்துபவர்.

இப்படி ஒரு சாதாரண, நடுத்தர முஸ்லிமிடம் கூட காணப்படாத இழிகுணங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கொண்ட P.J.யின் சொந்தக் கருத்து, ஜகாத் ஒரு பொருளுக்கு ஒருமுறை கொடுத்தால்போதும்; அது தூய்மையாகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்பதாகும்.

இப்போது சொல்லுங்கள் P.J.யின் வாதப்படி குர்ஆன், ஹதீஸில் இல்லாத மனிதக் கருத்தை ஏற்பதாக இருந்தால், நேர்வழி நடந்த, சுவர்க்கத்து நன்மாராயம் பெற்ற, அல்லாஹ் பொருந்திக் கொண்ட இரண்டு கலீஃபாக்களின் சொந்தக் கருத்தை ஏற்பதா? அல்லது அவர்களின் கால்தூசுகூட பெறாத நவீன இமாம்(?) P.J.யின் சொந்தக் கருத்தை ஏற்பதா? அப்படிப்பார்த்தாலும் ஜகாத் வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்பது நிலைநாட்டப்பட்டு விடும்.

உண்மையில் குர்ஆன், ஹதீஸை முறைப்படி ஆய்வு செய்து, ஜகாத் பற்றிய சட்டத்தை இவர் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால், ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால்போதும் மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் அப்பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்பது உண்மையாக இருந்தால், அதற்குறிய நேரடி குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்து வைத்திருப்பார். அவரது இந்த கருத்திற்கு ஆதாரமாக நேரடி குர்ஆன் ஆயத்தையோ, ஹதீஸையோ எடுத்து வைத்து விட்டால், நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் உடனடியாக அதைப்பற்றிப் பிடிக்கக் கடமைப்பட்டவர்கள். அப்போது நான்கு கலீஃபாக்கள் நடைமுறைப்படுத்தியது, இது காலம் வரை நடைமுறையில் இருந்து வருவது இவை அனைத்தும் ஆதாரமாக நிற்காது. இவரது இழிகுணங்களும் கருத்தில் கொள்ளப்பட்டது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமே ஆதாரமாக நிற்கும்.

ஆனால் அப்படிப்பட்ட குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ அவர் தரவில்லை. அது மட்டுமல்ல; அதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தை நான் தர வேண்டியதில்லை. எனது சுய கருத்தை மறுக்கிறவர்களே ஆதாரம் தர வேண்டும் என்று விதண்டாவாதம் செய்கிறார்.

இதில் இன்னும் பெரிய வேடிக்கை, ஒரு சட்டத்தை நிறுவுகிறவர்கள்தான் ஆதாரம் தர வேண்டும் என்பதை நிலைநாட்டி அதற்காக பல ஆதாரங்களையும், அரபியிலும், தமிழிலும் விவாத அரங்கில் எடுத்து வைத்தவர், கடைசியில் அவர்கள்தான் நிறுவுகிறார்கள்; நான் அதை மறுக்கிறேன்; எனவே நான் ஆதாரம் தர வேண்டியதில்லை; அவர்கள்தான் ஆதாரம் தர வேண்டும் என்று கூறி ஒரு அந்தர்பல்டி அடித்தார். இதையும் அவரது ஆதாரவாளர்கள் ஏற்கிறார்கள் என்றால் அவர்களின் அறியாமையை எடை போட்டுக்கொள்ளுங்கள்.

ஜகாத் வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுப்பது இன்று 1426 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பது. இதுதான் நிறுவுவது என எந்த அடிமுட்டாளும் கூறமாட்டான். காரணம் இதுவரை இல்லாத ஒன்றை புதிதாக எடுத்து வைப்பதுதான் நிறுவுவதாகும். உதாரணமாக ஒரு நிறுவனம் நிறுவப்பட்டது (Established) 1986 என்றால் அதற்கு முன்னர் அந்த நிறுவனம் இல்லை என்பதை அடிமுட்டாளும் விளங்குவான். இப்போது புதிதாக நிறுவுவது, “ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால்போதும்; மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை” என்பதேயாகும். இதை திருவாளர் P.J.தான் நிறுவுகிறார். எனவே அதற்குரிய ஆதாரத்தைக் கொடுக்க கடமைப்பட்டவர் அவரே. இதற்கு அவர் ஆதாரம் கொடுக்காதவரை இக்கருத்து அவரது சொந்தக் கருத்து. எனவே அவரின் இந்த சொந்தக் கருத்து குப்பைத் தொட்டியில் போட வேண்டிய கால்காசு பெறாத சுத்தமான உளறலாகும்.

அரசர்களையும், ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்தி அவர்களிடமிருந்து அற்பக் காசுகளை பெறும் கெட்ட நோக்கத்துடன், இந்தப் புரோகிதரின் ஆபாக்களான முன்னோர்கள், புரோகிதர்கள், அரசர் விபச்சாரம் செய்தால் அதற்கு தண்டனை இல்லை; ஆட்சியாளர்கள்தான் ஜும்ஆ நடத்த முடியும் போன்ற மூடத்தனமாக சட்டம் இயற்றினார்களே அதுபோல், இவரை கண்முடி ஆதரித்து இவரது காலடியில் காசை கொட்டுகிறார்களே அந்த செல்வந்தர்களைத் திருப்திப்படுத்தும் தீய நோக்கத்துடன் இவரது கற்பனையில் உருவானதே ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும். மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்ற குருட்டுச் சட்டம்.

இவர் இந்த குருட்டுச் சட்டத்தை இயற்றிக் கொண்டு முன்னாள் புரோகிதர்களைப் போல் அதற்குரிய ஆதாரங்களைத் தேடி அழைந்தார். அதனால்தான் “மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பதால் செல்வந்தன் பாப்பராகி பிச்சைக்காரனாக ஆகிவிடுவான்,” “ஜகாத் என்பது பொருளை சுத்தப்படுத்துவது  ஒரு முறை சுத்தப்படுத்துவதால் அது சுத்தமாகிவிட்டது, மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்த வேண்டியதில்லை, “மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கச் சொல்வதால்தான் செல்வந்தர்கள் ஜகாத் கொடுப்பதில்லை; ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று சொன்னால் செல்வந்தர்கள் அனைவரும் தவறாமல் ஜகாத் கொடுத்துவிடுவார்கள்” என்று குர்ஆன் ஹதீஸுக்கு முரணான இவரது சொந்தக் கற்பனைகளை அவிழ்த்து விட்டார். இவை அனைத்தும் உரிய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் முறியடிக்கப்பட்டபின், இந்த ஆதாரங்களை கைவிட்டு புதிய புதிய ஆதாரங்களைத்தேடி அலைகிறார். அந்த அவரது முயற்சியில் தான் ஜகாத் பற்றிய ஆதாரபூர்வமான ஹதீஸ்களை பலவீனம் என உளறுகிறார். இன்னும் எத்தனை உளறல்களை எடுத்து ரீல் விட்டு தனது பக்தர்களை ஏமாற்றப் போகிறாரோ?

தொழுகையில் பிஸ்மியை சப்தமிட்டு ஓதும் விஷயத்தில் ஆமீன் மிக பலத்த குரலில் சப்தமிட்டுக் கூறும் விஷயத்தில், நெஞ்சில் கைகட்டும் விஷயத்தில், இருப்பில் விரலாட்டும் விஷயத்தில், இன்னும் இவைபோல பல விஷயங்களில் பலவீனமான ஹதீஸ்களையும் சந்தேகத்திற்குரிய ஹதீஸ்களையும், அஃதர்களையும் தூக்கி நிறுத்த வரிந்து கட்டிக்கொண்டு வாதாடுகிறவர், ஜகாத் விஷயத்தில், இது உமர்(ரழி) அவர்களின் சுயகருத்து, இது அலீ(ரழி) அவர்களின் சுயகருத்து, அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காழிரீ. நபிதோழர் என்பதற்கு போதிய ஆதாரமில்லை என்றெல்லாம் உளறி வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும், கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும்;  ஒரு வருடம் பூர்த்தியானால்தான் ஜகாத் கடமை, பொருளை சேமித்து வைப்பவர்களே அதற்குரிய ஜகாத்தைக் கொடுக்க வேண்டும் போன்ற ஹதீஸ்களை மறுத்து வருகிறார்.

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? அற்ப உலக ஆதாயத்திற்காக, முழுக்க, முழுக்க தனது சுயநலத்திற்காக, செல்வந்தர்களின் தயவுக்காக ஜகாத் பற்றிய ஒரு குருட்டுச் சட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்குரிய ஆதாரங்களைத் தேடி, நாளுக்கொரு ஆதாரத்தை மாறி மாறி தந்து கொண்டிருக்கிறார் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. தனது தவறான சட்டங்களை நிலைநாட்ட, 1986-ல் “குர்ஆனோடு விளையாடும் குர்ஆனின் குரல்” என்று ஒரு மாத இதழைத் தாக்கி எழுதிய P.J. இன்று அதேபோல் “குர்ஆனோடு விளையாடும் P.J. என்ற இழிநிலைக்கு ஆனாகி நிற்கிறார். 9:34 இறைவாக்கில் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ என்று யக்னிஸூனஎன்ற அரபி பதம் தெள்ளத்தெளிவாக நேரடியாக இருக்கிறது. ஜகாத் கடமையாவதற்கு அடிப்படையான சேமிப்பு என்ற பதத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டு, எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ என்று எழுதி தனது ஆதரவாளர்களை ஏமாற்றி இருக்கிறார்.

இப்படி குர்ஆனிலும், ஹதீஸிலும் இருப்பதை உள்ளது உள்ளபடி மொழி பெயர்க்காமல், தனது குருட்டு வாதத்திற்குத் தருந்தால்போல் அவற்றைத் திரிப்பது, வளைப்பது, மறைப்பது அவரது வாடிக்கையாகும். 2:159-162, இறைக்கட்டளைகளைப் பற்றிய அச்ச உணர்வு அவருக்கு சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை. JAQH, TNTJ போன்ற பிரிவுகள் கூடாது என்று ஆரம்பத்தில் நடந்த விவாதத்தில் அல்குர்ஆன் 22:78-ல் அல்லாஹ்வாகிய அவனே உங்களுக்கு 'முஸ்லிம்' என  பெயர் சூட்டினான்–“ஹுவ ஸம்மாக்குமுல் முஸ்லிமீன்” என்றிருப்பதை அவனே உங்களுக்கு 'முஸ்லிம்' என்று கூறினான் – சொன்னான் என்று அழுத்தமாக மீண்டும், மீண்டும் கூறியது, பிறை விவாதத்திலும், எழுதியதிலும், வாகனக் கூட்டத்தார் பற்றிய ஹதீஸில் “ஷஹித” என்ற அரபி பதத்திற்கு சாட்சி சொன்னார்கள் என்பதிலுள்ள சாட்சியை மறைத்துவிட்டு சொன்னார்கள், சொன்னார்கள் என்று அந்த ஹதீஸ் இடம் பெற்ற பல இடங்களில் மறைத்து எழுதியதும், இந்த ஜகாத் பற்றிய ஹதீஸில் சேமிப்பு என்ற பதத்தையும், உங்கள் சேமிப்புகளில் சிறந்தது நல்ல மனைவியே என்ற பகுதியையும் இருட்டடிப்பு செய்ததும் இதற்குப்போதிய ஆதாரமாகும். எனவே இவர் திட்டமிட்டே சத்தியத்தை மறைத்து, அவரை நம்பி அவர் பின்னால் கண்மூடிச் செல்பவர்களை வழிகேட்டில் இட்டுச்செல்கிறார் என்ற ஐயத்தை உண்டாக்குகிறதா? இல்லையா?

எனவே அபூஅப்தில்லாஹ் இதுகாலம் வரை குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது பல்டி அடித்து குர்ஆன், ஹதீஸ், கலீஃபாக்கள், நபிதோழர்கள் கருத்து என்று மூன்றை மார்க்க ஆதாரமாகக் கூறி வருகிறார் என்று அவரும், அவரின் ஆதரவாளர்களும் அவதூறு பரப்புவது முற்றிலும் தவறாகும். அவை உமர்(ரழி) அவர்களின் கருத்தோ, அலீ(ரழி) அவர்களின் கருத்தோ அல்ல; நூற்றுக்கு நூறு நபி(ஸல்) அவர்களின் சுமார் பத்து வருட நடைமுறையை கண்ணால் கண்டு அதன்படி அவர்கள் அறிவிப்பதாகும். P.J. நிராகரிக்கும் அந்த மூன்று ஹதீஸ்களும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் ஏற்கத்தக்கவையே. அவரது பேச்சை நம்பி வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்காமல் இருப்பவர்கள் நாளை மறுமையில் அவர்களது செல்வங்கள் நெருப்பிலிட்டு காய்ச்சப்பட்டு அவர்களது நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடுபோடப்பட்டு, இவைதான் நீங்கள் சேமித்து வைத்தவை; அவற்றின் சுவையை சுவைத்துப் பாருங்கள் என மீண்டும் மீண்டும் வேதனை செய்யப்படுவார்கள் என்று அல்குர்ஆன் அத்.9.வச.35 கூறுவதை எடுத்து எச்சரித்து முடிக்கிறோம்.
http://www.readislam.net/zakat-naj08-07.htm

No comments:

Post a Comment