முஸ்லிம்களின் தியாகப் பெருநாள் தினத்தில் கடந்த 6-ந் தேதி மழை வெள்ளம் திருப்பூர் மாநகரைச் சூழ்ந்தது. இதில் சத்யாநகர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இந்தப் பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்களில் அனைத்து தரப்பைச் சேர்ந்த மக்களும் உள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய திருப்பூரில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து அனைத்து ஜமாத் கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இதில் ஐக்கிய ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய இளைஞர் சங்கம்(ஐ.ஒய்.ஏ.), பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சோஷியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, குர்பானி அறக்கட்டளை, வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா, அர்ரஹ்மான் டிரஸ்ட், எம்.ஐ.குரூப்ஸ், ஜமாஅத்துல் உலமா ஆகிய அமைப்புகள் இணைந்துள்ளன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் சேரவில்லை.
இந்தக் கூட்டமைப்பின் தலைவராக ஹாலிதீன், துணைத்தலைவராக பசீர்அஹமத், செயலாளர்களாக அஹமது பைசல், அமானுல்லா, செய்யது முஸ்தபா, பொருளாளர்களாக ஹசன், தஸ்தகீர், மேலாண்மை குழு உறுப்பினர்களாக நசீர்அஹமத், அம்சா பாய், ஜபருல்லா பாகவி, சிராஜுதீன், நாசர்அலி சிராஜி, ரியாஸ்தீன் இம்தாதி, முஹம்மது யாசர், ஜெய்லானி, லுக்மான், யாசீன், இம்ரான், முபாரக் பாஷா, யூசுப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்தக் கூட்டமைப்பு குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:
"திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அடையாளஅட்டை, நீரில் அடித்து செல்லப்பட்ட அரசு ஆவணங்கள் கிடைக்க முயற்சி செய்யப்படும். அதுவரை அரசு அவர்களுக்குத் தற்காலிக ரேசன்கார்டுகள் கொடுக்க வேண்டும். கியாஸ் சிலிண்டர் இழந்தவர்களுக்கு உடனே சிலிண்டர் வழங்க வேண்டும்.
இது தவிர, பள்ளி பாடபுத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் ஆகியவை வழங்க கூட்டமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழங்கக்கூடிய இலவச கிரைண்டர், மிக்சி, பேன் ஆகியவற்றைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனே வழங்க வேண்டும். வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன உடல்களை அரசு போர்க்கால அடிப்படையில் மீட்டு தர வேண்டும். ஜம்மனை ஆற்றை ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் வராமல் தடுப்பு அணை கட்டி குடியிருப்புகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த வெள்ளப்பெருக்கைச் சிறிய அளவிலான சேதம் போல அரசு கணக்கெடுத்துள்ளது. ஆனால் இங்கு சுனாமி வந்தது போல மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பாதிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அரசுக்குத் தெரிவிக்காமல் மூடிமறைக்கப் பார்க்கிறது.
எனவே தமிழக முதலமைச்சர் திருப்பூருக்கு நேரில் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை இன்னும் 15 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்"
என்று அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
http://www.inneram.com/2011111420176/trippur-corporation-under-estimate-flood-damage
No comments:
Post a Comment